சூழ்மைக் காத்திடு ! புதிய சமுதாயம் படைத்திடு!!

Saturday, 20 August 2016

ஜமாத் என்ற கூட்டமைப்பும் அதன் பணிகளும்:


✔ஜமாத் என்றால் கொள்கை அடிப்படையிலான 'குழு ' , 'கூட்டமைப்பு '  அல்லது 'சங்கம் ' என்று பொருள். அந்தந்த பகுதிகளில், தங்களுக்கென்று ஒரு அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு, திருமணம், விவாகரத்து மற்றும் சொத்து சம்பந்தமான பிரச்சினைகளை அல்குரான் மற்றும் ஹதீஸ் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்த்துக்கொள்ளப்படுகிறது. முஸ்லிம் ‘உம்மத்’கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட ஜமாத் என்ற அடிப்படை அமைப்பு மிகவும் அவசியமானதொன்றாக இருக்கிறது. 

✔ஜமாத் நிர்வாகத்தின் செயல்பாடுகளை கண்கானிக்க அரசால் ஏற்படுத்தப்பட்ட அமைப்புத்தான் வக்பு வாரியம். தமிழகத்தை பொறுத்தவரை வக்பு வாரியம் என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அமைப்பாகும். தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான ஜமாத்களும் வக்பு வாரியத்தின் தலைமையிலும் அதன் கட்டுப்பாட்டிலும்தான் இயங்கி வருகின்றன. சில ஊர் ஜமாத் வக்பு வாரியத்துடன் இணைக்கப்படாமல் தனியாக இயங்கி வருகின்றன.

✔ஜமாத் நிர்வாகத்தில் பங்கெடுக்க பெண்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் முகம்மது நபி(ஸல்) காலத்தில் ஜமாத்தில் பெண்கள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. இஸ்லாம் பெண்களுக்கு அளித்த உரிமைகளை இன்றைய அடிப்படை வாதிகள் வழங்க மறுக்கிறார்கள் என்ற குற்றசாட்டும் நிலவுகிறது. பெண்களை ஜமாத் நிர்வாகிகளாக நியமிக்க தயங்கும் ஆண்கள், பெண்களை போராட்டத்திற்கும், உள்ளாட்சி, சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்ற பதவிகளில் முஸ்லிம் பெண்கள் கலந்துகொள்ளுவதை யாரும் மறுக்கவில்லை என்பதுதான் நிதர்சன உண்மை. ஒரு சில ஊர்களில் ஜமாத்தினை ஒழுங்குப்பட நடத்திட அந்தந்த ஊரை சேர்ந்த போதுமான ஆண்கள் முன்வரவில்லையெனில்,  பெண்களுக்கும் ஜமாத் நிர்வாகப் பதவிகளை வழங்குவதில் தவறொன்றும் இல்லை உம்மத்களே!. ஆண்கள் முன்வந்தாலும், பெண்களுக்கும்  நிர்வாகப் பதவிகளை தாராளமாக கொடுக்கலாம். ஏனெனில், பெண்கள் சம்பந்தமான பிரச்சனைகளை அவர்கள் ஆண்களைவிட வெகு இலகுவாக புரிந்து கொள்வார்கள். 

[தமிழ்நாட்டில் முதன் முதலாக, மதுரையில் கே கே நகர் பள்ளிவாசலில் ஜமாத்தின் உறுப்பினராக 59 வயதான, அரசு கல்லூரியில் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்ற நான்ஜிம் பரகத் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது வரவேற்கப்படவேண்டியது (The Hindu, 27-10-2004, Trichy Edition)]

✔ஜமாத் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் போது ஒட்டுமொத்த சமுதாய நலனை கருத்தில் கொண்டுதான் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதனால், பணச் செல்வாக்கு மற்றும் வாரிசுரிமை போன்றவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இஸ்லாமிய அறிவு பெற்றவர்களும், ஐவேளை தொழுபவர்களும் தான் (பெரும்பாலான!) ஊர்களில் ஜமாத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதில் ஐயப்பாடுல்லது!. ஒவ்வொரு ஊர் ஜமாத்தையும் நிர்வகிக்க குறைந்த பட்சம் தலைவர், பொருளாளர், செயலாளர் போன்ற மூன்று நபர்களாவது வேண்டும். இருப்பினும் ஜமாத்தை திறம்பட செயல்படுத்திட  தலைவர்(1), துணைத் தலைவர்(1), பொதுச் செயலாளர்(1), பொருளாளர்(2), செயலாளர்(2) & ஆலோசனைக்குழு(3) என்று மொத்தம் 10 நபர்களாவது இருக்க வேண்டும்.  இதில் ஊருக்கு ஏற்றாற்போல் நிர்வாகிகளின் எண்ணிக்கை மாறுபடலாம்.

✔ஜமாஅத் நிர்வாகம் துரிதமாகவும், ஆக்கபூர்வமாகவும் நடைபெற  பெரியோர்கள், இளை​ஞர்​கள் என்றிணைந்த  நிர்வாகமாக அமைய வேண்டும். அப்படி அமைந்தால் அந்த ஊர் சிறப்பாக உருவாகும் என்பதில் எவ்வித இயப்பாடுமில்லை.

ஜமாத்தின் முக்கியமான பணிகள்:
==============================
1.பள்ளிவாசலை பராமரித்தல் மற்றும்  தேவைஏற்படின் விரிவுபடுத்துதல்.
2.மதரஸா கல்வியை திறம்பட நடத்துதல், புதிதாக மார்க்க கல்வி நிலையங்கள் கட்டுதல்.
3.ஹஜ்ரத், மோதினார் நியமித்தல், ஊதியம் வழங்குதல். 
4.திருமணங்கள் நடத்துதல்.
5.மணமுறிவு பிரச்சினைகளை தலையிட்டு சுமூகமாக தீர்த்து வைத்தல்.
6.சண்டைப் பிரச்சினைகள், சொத்து பிரச்சினைகளை தீர்த்து வைத்தல்.
7.சமூகத்துக்கு புறம்பான செயல்களை தடுத்து நிறுத்துதல்.
8.ஊர் சொத்துகளை பாதுகாத்தல்.
9.புதிய நபர்களுக்கு குடியுரிமை வழங்குதல்.
10. ஜமாத்திற்கு சொந்தமான அசையும் அசையா சொத்துகளை பராமரித்தல்.
மேற்கூறிய முக்கிய பணிகள் மட்டுமல்லாமல் சந்தா, நன்கொடை , வாடகை வசூல் செய்தல் , ஏலம் விடுதல் போன்ற பணிகளும் உள்ளன.  அனைத்து பணிகளும் சொந்த விருப்பு-வெறுப்பின்றி இஸ்லாத்தின் சட்டத் திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க  வேண்டும் என்பதை மட்டும் அனைவரும் மனதில் இருத்திக்கொள்ள வேண்டும்.
            
                                                                                                                -ஆவுடை யூனுஸ்-

0 comments:

Post a Comment